logo
home ஆன்மீகம் ஜனவரி 18, 2019
18 சித்தர்கள் சக்திபீடத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா
article image

நிறம்

பஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி தவம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பதை அறிந்த பல மகான்கள், அம்மலையைச் சுற்றியுள்ள குகை, ஆஸ்ரமம் போன்றவற்றில் தங்கியிருந்து தங்களது ஆன்மிக சக்தியை உலகறியச் செய்தனர். இவர்களைத் தேடி வரும் பக்தர்களுக்கு, தவத்தின் மூலமாகப் பெற்ற ஞானத்தால் அருள்பாலித்து, சித்த புருஷர்களாக விளங்குகின்றனர் பல மகான்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். அவர் பிறந்தது 22.1.1870ஆம் ஆண்டு. வேண்டப்பட்டவர், வேண்டாதவர் என்று மகானுக்கு யாரும் கிடையாது. பகைவர், நண்பர் என்ற பிரிவினை கிடையாது.எல்லோரும் ஒன்றே,எல்லாமும் ஒன்றே. அவருக்கு என்று தனி கொள்கையோ,மதமோ,ஜாதியோ கிடையாது. எம்மதமும் சம்மதமே. மனிதன், மிருகம், கல் எல்லாம் அவருக்கு ஒன்றே. சர்வத்தையும் பிரம்மமாகக் காணும் பக்குவ நிலையை அடைந்திருந்தார் அவர். நாற்பது ஆண்டு காலம் திருவண்ணாமலையில் பல சித்துகளைச் செய்திருக்கிறார். ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களோடு வளர்ந்திருந்தாலும், குடும்ப வாழ்வில் நாட்டமின்றி திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து சித்திநிலை பெற்றவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். அந்த மகானின் யோக வாழ்வை விவரிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மடங்கள், கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டு, சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் புகழை உலகிற்கு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், குருஜி, ஸ்ரீ வித்யா உபாசகர் திரு.கே.வீ.எல்.என்.ஷர்மா அவர்கள் மூலம், சென்னை மாடம்பாக்கத்தில் (எண்: 1, சன்னதித் தெரு, மாடம்பாக்கம், சென்னை- 600126 ) ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு மிக அற்புதமான பிருந்தாவனம் துவக்கப்பட்டு, 18.சித்தர்களுக்கு சக்திபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சக்தி பீடத்தில் அன்னை பராசக்தி ஸ்ரீசக்ர மகாமேருவாக பச்சைக் கல்லில் எழுந்தருளியிருக்கிறாள். 18 சித்தர்களுக்கும் தனி சன்னதிகள் உண்டு. இங்கு ஜாதி மத பேதம் இன்றி அனைவரும் வந்து பூஜையில் கலந்து கொண்டு வழிபாடுகள் நடத்தலாம்.சத்குருவுக்குப் பிரத்யேகமாக சிலை செய்து வழிபடப்படுகிறது. கோ சாலை, நித்ய அன்னதானம் மற்றும் வாரந்தோறும் இலவச மருத்துவ ஆலோசனை மூலம் மருந்துகள்,ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, ஜனவரி 26 அன்று விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் 18 சித்தர்கள் சக்திபீடம் பிருந்தாவனம், மாடம்பாக்கத்தில் நடை பெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்று மகானின் அருளைப் பெறலாம். - திரு ரவிசங்கர் செல்: 9884057317 தொ.பேசி எண்: 044-22281408