logo
home ஆன்மீகம் ஏப்ரல் 01, 2022
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது
article image

நிறம்

மானாமதுரை, தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம் பெற்ற சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கியது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 

இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கோயிலில் புனித நீர் கலசங்களை வைத்து நவசக்தி ஹோமம் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிமரத்திற்கு கலச நீரால் அபிஷேகம் நடத்தி கொடியேற்றம் செய்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இந் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் மூலவர் முத்துமாரியம்மனுக்கும் ஊற்சவருக்கும் அபிஷேகம் செய்து அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைபவம் ஏப்ரல் 5ஆம்  தேதியும் மறுநாள் 6 ஆம் தேதி இரவு மின்விளக்கு அலங்காரத்தில் முத்துமாரி அம்மன் பவனி வருதலும் அதன் பின் ஏப்ரல் 7 ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது. 

திருவிழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தாயமங்கலம் வந்து முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் தீச்சட்டி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். 

பக்தர்களின் வசதிக்காக மதுரை, மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து தாயமங்கலத்துக்கு விழா நாட்களில் இரவு பகலாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்துள்ளார்.