logo
home ஆன்மீகம் ஜூலை 08, 2016
குளத்தில் சங்கு தோன்றும் அதிசயக் திருக்கோயில், மன நிம்மதி, ஆஸ்துமா பிரச்சனை போக்கும், வேதகிரீஸ்வரர் கோயிலின் அற்புதங்கள்
article image

நிறம்

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலமான இது செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்தது. தினமும் உச்சி வேளையில் கழுகுகள் வந்து பிரசாதம் உண்ணும் மலைக்கோயில் என்று பிரசித்து பெற்றதாகும் இது. 20ஆம் நூற்றாண்டு வரை இத்திருக்கோயிலில் கழுகுகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர்.
சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர்.
சாருப்ய என்னும் பதவியை பெறுவதற்காக பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். இவர்களின் தவத்தின் தீவிரத்தால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், இவர்கள் முன்பு தோன்றி இவர்களுக்கு வரம் அருளும் சமயத்தில், நா தவறி ‘சாருப்ய’ என்பதற்கு பதில் கழுகு எனப் பொருள்படும் ‘சாயுட்சய’ என கேட்டதால் கழுகாக மாறினார்கள். யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இத்தலத்தில் பிரசாதம் உண்டு செல்வதாக ஐதீகம். 
இன்றும், இந்திரன் இத்தலத்து பெருமானை பூஜிக்கப்படுவதன்  அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகவும் மறுநாள் கருவறை திறக்கும்போதும் தாங்கவொண்ணா வெப்பமாக இருக்கும் என்றும் கூறுவர்.
வேதமே கிரியாக (மலையாக) அமைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் வேதகிரீஸ்வரர் என்று வழங்கப்பெறுகிறார். பக்தவத்சலேஸ்வரர் என்னும் பெயரும் கொண்டிருக்கிறார்.தாயாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும். 
அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. 
மேலும் இத்தலத்தின் சிறப்பாக, கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய வலம்புரிச் சங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தலத்துத் திருக்குளத்தில் கிடைக்கப் பெறுகிறது. சங்கு பிறக்கும்போது குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.
சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.
இதற்கு முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயர்  சதுர்த்தியான வியாழக்கிழமை சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரை ஒதுங்கியது. புனித சங்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மைபெறும்.
இந்த குளத்தில் குளித்தால் தோல் வியாதி, மனநிலை பாதிப்பு குணமாகும் என்பது ஐதீகம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சங்கு தீர்த்த குளத்தில் நீராடி வழிபட்டு செல்கின்றனர். 
வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும், இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்றே அறிவர். இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.
எம்பெருமான் ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைப் போல, இங்கும் கிரிவலம் செய்வது மிகச் சிறப்பானதாகும். அம்மலையைச் சுற்றி 12 லிங்கங்கள் உள்ளதைப் போல, இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். 
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மூலிகை காற்றை சுவாசிப்பதால் நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
இங்கு மலை மீது வேதகிரீஸ்வரர் கோயில், கீழே பக்தவச்சலேஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன் கோயில்கள் உள்ளன. தாழக்கோயிலில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட 4 ராஜபுரம், உள்புறத்தில் ரிஷிகோபுரம் உள்ளன. கீழே இருந்து 540 படிகள் ஏறி மலைக் கோயிலுக்கு செல்ல வேண்டும். 
முக்தியளிக்கும் மூலாதாரனாக இத்தலப் பெருமான் விளங்குகிறான். மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும், திருமணமானவர்களுக்குப் பிள்ளை வரம் அருளும் தலமாகவும், இதைக் கொண்டாடுகிறார்கள்.
ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் மூலிகைக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைவர்.