logo
home பலன்கள் செப்டம்பர் 12, 2017
கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் தெய்வீகப் பலன்கள்?
article image

நிறம்

தற்போது திருமணம் என்பது ஒரு ஆடம்பரமாக நடைபெறும் ஒரு விஷேசமாக மாறிவருகிறது. காசு இருந்தால் லட்சக்கணக்கில் திருமண மண்டபங்களுக்கு வாடகை கொடுத்து மிகுந்த ஆடம்பரமாக செய்யப்படும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் என்பது இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, இறை சக்தியின் அருளால் இம்மைக்கும் (வாழும் காலம்) மறுமைக்கும் (உடலை விட்டு பிரிந்து இறைவனை அடைவது) எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காகத்தான் நமது முன்னோர்கள் வகுத்தனர். காலப்போக்கில் இந்நிலை மாறி காசு, பணம், வசதி, வாய்ப்பு, ஜாதி, மதம் போன்றவை மனித மனங்களில் குடி கொண்டதால், இன்றைய திருமணம் என்பது ஆடம்பரம் என்பது குடிகொண்டு, திருமணத்தின்போது பார்ட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று தன் நிலை மாறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆதி காலத்தில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் திருக்கோவில்களில் இறைவனின் சன்னதி முன்பு நின்று தங்களது வாழ்க்கைத்துணையின் கரம் பற்றினர். மேலும், இறைவன் சாட்சியாக ஒருவருக்கொருவர் அன்பு, பண்பு, சுகம், துக்கம் போன்றவற்றை பகிர்ந்து வாழ்க்கையை நடத்துவோம், நீதி, நேர்மை, உண்மை, பக்தி போன்றவற்றை தவறாது கடைபிடித்து எங்கள் கால இறுதியில் இறை பாத கமலங்களை சரணடைவோம். என்று இறைவனின் முன்நின்று மாலை மாற்றி இறைவன் முன் வாக்குறுதி அளித்து தங்கள் வாழ்க்கையைத் துவங்கினர். இறை நம்பிக்கையும், இறை பக்தியும் அவர்கள் மனத்தில் ஆழ பதிந்ததால், தங்களது வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்யாமலும், விட்டுக்கொடுத்தும் வாழ்க்கையை நடத்திவந்தனர். ஆனால் கால நிலை மாற்றம், வசதி வாய்ப்பு, ஆன்மீக நாட்டமின்மை, அதிகாரப்போக்கு, ஜாதி, மதவெறி போன்ற காரணங்களால் திருமணம் என்பது இன்றைக்கு ஆடம்பரமாக நடத்தப்படும் ஒரு கூத்தாக மாறிவிட்டது. கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்: ஒரு சில ஜாதகர்களுக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர். மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம். மேலும், கோயிலில்/வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மேற்கண்ட காரணத்தால்தான் நம் முன்னோர்கள் வசதி இருந்த போதிலும் திருமணத்தை திருக்கோயில்களில் நடத்தினர்.