logo
home ஆன்மீகம் ஏப்ரல் 05, 2016
பகவானை ஆட்கொண்டதால் ஆழ்வார் என அடைமொழி பெற்ற , ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார்
article image

நிறம்

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். ஊலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர். “புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது. இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார். வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும். ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.