
திருமணம் நடைபெறுவதற்கு முன் ஆண் பெண் வாழ்க்கை, மண ஒற்றுமை குறித்து ஜோதிடம் பார்ப்பது நடைமுறை, ஒருசில தோஷங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்து தம்பதிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக கூடாது என்பதற்காக, நமது முன்னோர் ஜோதிட சாஸ்திரத்தை நாடி மணமக்களின் திருமண உறவு சிறக்கவும், திருமணத்தில் உள்ள தடைகளை அகற்றவும் பரிகாரம், தெய்வீக பூஜை, வேள்விகள் என்று சில நடைமுறைகள் மூலம் தம்பதியரின் வாழ்வை இனிமையாக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் மாங்கல்ய தோஷம் என்பது திருமணத்தில் முக்கியத் தடையாக இருக்கிறது. அந்த மாங்கல்ய தோஷத்தைப் பற்றி எளிமையாக பார்ப்போம்.
மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.
ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.
8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும்.
முற்பிறவியில் செய்த தவறுகள் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாங்கல்ய தோஷம் போக்கும் முறை:
திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை :
ஒரு புதிய பொட்டு தாலி தங்கத்தில் வாங்கி தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பு ஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொள்ளவும்.
ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ தங்களது இஷ்ட தெய்வங்களை மனதில் வழிபாடு செய்துவிட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த மங்கள தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற பெண்ணிற்கு கட்ட வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து அந்த தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்த்து விடவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.
அதே சமயத்தில் தோஷம் கழிக்கும் போது உடுத்தி இருந்த உடைகளை மீண்டும் உடுத்தக் கூடாது. அதனால் அந்த உடைகளை வீசி எறியவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு)
அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக தர வேண்டும்.
அல்லது அந்த தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாள் செவ்வாய் அல்லது வெள்ளி இல்லாமலிருப்பது நல்லது.
மாங்கல்ய தோஷம் தீர்க்கும் ஸ்தலம்:
திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடி சாலையில் வாளாடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், லால்குடி ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம்.
இங்கு அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீசுவரர் சுவாமி திருக்கோயில், மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
மாங்கல்ய மகரிஷி என்பவர் இக்கோயிலில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து காலையிலும், மாலையிலும் சிவபூஜைகள் செய்து வழிபட்டார். அவருக்காக சிவபெருமான் திருக்காட்சி தந்தருளியுள்ளார். மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க, திருமணப் பாக்கியம் வேண்டி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த வரத்தை இங்குள்ள ஈசுவரன் தந்தருளுவதாக நம்பிக்கை.
இக்கோயிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில் மாங்கல்யதாரண பூஜையை நிகழ்த்தியவர் மாங்கல்ய மகரிஷி. இவரது தவவலிமை அனைத்தும் அவரது உள்ளங்கையில் அடங்கியிருந்ததாம். மாலைகளில் தங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குரு.
மாங்கல்ய மகரிஷி:
திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன் மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம்.
திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரம் அமிர்தநேரம் என்பார்கள். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்றுமங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம்.
தடைபட்ட திருமணம் நடைபெறும்
உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ இடையாற்றுமங்கலம் கோயிலுக்கு வந்து, மாங்கல்ய மகரிஷி, மாங்கலீசுவரர் - மங்களாம்பிகையை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். மேலும் உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும், தங்கள் நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.
இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு இறைவனை வணங்கியவாறு மிகப் பெரிய நந்தி அமைந்துள்ளது. மாங்கல்ய தோஷத்தைப் போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார்.
திருமணம் நிச்சயம் நடைபெறும்:
திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும் இத்திருக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும். திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சகிதமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.
உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோயிலிலுள்ள சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருள்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது பெரும் நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே வெளிப்படுத்துகிறது.