logo
home பலன்கள் ஜூலை 11, 2018
இந்திரன், இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் ஆனிமாதத்தின் சிறப்புகள்
article image

நிறம்

சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும். ஆனி பௌர்ணமி அன்று திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இழந்தது கிடைக்கணுமா???? ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம். ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் நடைபெறும். திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமியன்று, சுவாமிக்கு வாழைப்பழத்தார்களை சமர்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ, பிரார்த்தனை செய்வர். ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி "மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்.