logo
home ஆன்மீகம் பிப்ரவரி 15, 2016
நதிகளின் பாபத்தை போக்கும் மகாமகம் கடந்து வந்த பாதை மற்றும் அதன் தனிச்சிறப்பை பற்றி விரிவான ஓர் அலசல்
article image

நிறம்

மாசி மாதம் வியாழன் கோள் சிம்மராசியில் இருக்கும் பொழுது, மகம் நட்சத்திரமும், பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம் ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக பாரதத்தில் இந்துக்களின் புனித நீராடல் என்பது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும். மகாமகம் புராணக் கதை: இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை,யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அவர் கும்பகோணத்திலுள்ள மகாமக குளம் என்று அழைக்கப்பெறும் தீர்த்தத்தில் நீராடினால் நதிகளின் பாவங்கள் தீருமென்றார். மகாமகம் தொடர்புடைய சைவக் கோயில்கள் சிவன் கைலாசத்தில் இருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். 1. நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில் 2. அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் -கும்பேஸ்வரர் கோயில் 3. வில்வம் விழுந்த இடம் -நாகேஸ்வரர் கோயில் 4. உறி (சிக்கேசம்) விழுந்த இடம் -சோமேஸ்வரர் கோயில் 5. பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில் 6. தேங்காய் (நாரிக்கேளம்) விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில் 7. சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில் 8. புஷ்பங்கள் விழுந்த இடம் -கம்பட்ட விஸ்வநாதர் கோயில் 9. மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில் 10. அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில் 11. சந்தனம் விழுந்த இடம் -காளஹஸ்தீஸ்வரர் கோயில் 12. அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில் இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன. மகாமகம் தொடர்புடைய வைணவக் கோயில்கள்: மகாமகத்தின்போது கீழ்க்கண்ட வைணவக் கோயில்களின் சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும். சார்ங்கபாணி கோயில் சக்கரபாணி கோயில் இராமஸ்வாமி கோயில் ராஜகோபாலஸ்வாமி கோயில் வராகப்பெருமாள் கோயில் இவையனைத்தும் கும்பகோணத்திலேயே உள்ளன மகாமகப் புண்ணிய காலம்: தேவ குருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது. இதுவரை மகாமகம்: 1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743, 1755, 1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடை பெற்றுள்ளதற்கு கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய சான்றுகள் உள்ளன 15ஆம் நூற்றாண்டு மகாமகம்: திருச்சிராப்பள்ளி திருவானைக்கா கோவிலில் உள்ள விஜயநகரப் பேரரசின் குறுநில மன்னான தெலுங்குச் சோழன் வாலக காமயர் அக்கல ராசருக்குரிய கல்வெட்டில் திருவானைக்கா கோவிலிலிருக்கும் அகிலாண்ட நாயகியருக்குத் தினமும் அமுது படைக்க வெண்கோ கொண்கொடி என்னும் கிராமத்தில் ஒரு வேலி நிலம் தானமாக தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1482 மாசி மாதம் ஒன்பதாம் தியதி ஞயிற்றுக்கிழமை. அன்று மகாமகப் புண்ய காலமாகும். 16ஆம் நூற்றாண்டு மகாமகம்: கிருஷ்ண தேவராயர் கொண்டாடிய மகாமகம் தொடர்பாக இரு வெவ்வேறு நாள்கள் குறிப்பிடப் படுகின்றன. கி.பி.1517 தை மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயநகரமன்னர் கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509-1929) திருப்பதிக்குச் சென்று திருவேங்கடநாதனைத் தரிசித்தார். பிறகு கும்பகோணத்திற்குச் சென்று மாசி மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாமகப் புண்ய காலத்தில் மகாமகக் குளத்தில் நீராடினார். கி.பி.1518ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி புதன்கிழமை ஒரு மகாமகம் கும்பகோணத்தில் நடந்ததாகவும், அன்று கிருஷ்ணதேவராயர் மகாமகக்குளத்தில் நீராடி பொன்னும் பொருளும் வாரி வழங்கியதாகவும் கல்வெட்டுக்களின் மூலமாகத் தெரியவருகிறது. 17ஆம் நூற்றாண்டு மகாமகம்: 1624ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாமகம் வந்ததாகவும் அன்று ரகுநாத நாயக்கன் குளத்தில் நீராடி, தன் எடைக்குச் சமமான பொன்னை தானமாக வழங்கியதாகவும் துலாபார மண்டபத்தில் காணமுடிகிறது. 19ஆம் நூற்றாண்டு மகாமகம்: 1873 மகாமகம், மகாமகத்திருவிழாவின்போது புலவர்களும், இலக்கிய வாதிகளும் கூடி விவாதம் செய்துள்ளனர். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்களின் கூற்று மூலம் இதனை அறியலாம். “அந்த வருஷம் (1873) மகாமக காலத்தில் கும்பகோணத்தில் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத் சபைகள் நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன் என்கிறார். 1885இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது. தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது. அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். 1897இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது. 1897-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர். அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்யாசங்களும் சம்பாஷணைகளும் நடைபெற்றன. 20ஆம் நூற்றாண்டு மகாமகம்: இருபதாம் நூற்றாண்டில் வந்த மகாமகங்கள் பின்வரும் ஆண்டுகளில் நடந்துள்ளன. 6.3.1909 சனிக்கிழமை (கீலக மாசி 23) 22.2.1921 செவ்வாய் (ரௌத்ரி மாசி 11) 10.3.1933 வெள்ளி (ஆங்கிரஸ மாசி 27) 26.2.1945 திங்கள் (தாரண மாசி 15) 25.2.1956 (மன்மத மாசி 13) 14.2.1968 புதன் (பிலவங்க மாசி 2) 1.3.1980 சனி (சித்தார்த்தி மாசி 18) 18.2.1992 செவ்வாய் (பிரஜோத்பத்தி மாசி 6) 1933 மகாமகம்: கும்பகோணம் நகரத்திற்கு பிப்ரவரி 1932 இல்தான் முதன்முதலாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு தனியார் நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்திற்கு வழங்கியது. 1933ஆம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழா தலைத் தீப ஒளித் திருவிழாவாக மின்னியது. இந்த . 1956 மகாமகம்: மகாமகம் என்பது பொதுவாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரவேண்டியது. 1956 மகாமகம் 11ஆம் ஆண்டிலேயே வந்தவகையில் சிறப்பு பெறுகிறது. 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிங்க ராசியில் கூடிவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது. 1992 மகாமகம்: 1992 ஆம் ஆண்டு பக்தர்களின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். மகாமஹத்தன்று முக்கியமான கோவில் தேர்களில் இறைவன் வீதி உலா வந்து மக்களை ஆசீர்வதிக்கிறார்.ஸ்வாமிகள் நீராடும் போதே பக்தர்களும் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். இதை தீர்த்தவாரி என்று அழைக்கிறார்கள். இவ்வாறு செய்வது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். இம்மகா மகத்தில் கூட்ட நெரிசலால் பல உயிர்கள் பலியானது 21ஆம் நூற்றாண்டில் இதுவரை ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது. 2004 மகாமகம்: இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் மகாமகம் 6.3.2004 (மாசி 23) இல் நடைபெற்றது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திருவிழா தமிழக மக்களுக்கு முக்கியமானதாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில், பரபரப்பாகிவிட்ட வாழ்க்கை முறையையும் மீறி பல லட்சம் மக்கள் நாடெங்குமிருந்து வந்து கும்பகோணத்தில் குவிந்திருந்தனர் என்பது இந்திய ஆன்மிகப் பாரம்பரியம் தொடர்வதற்கு சான்று. 75,000 பேர் நிற்கக்கூடி மகாமகக் குளத்தில் இந்தியா முழுவதும் இருந்து வந்து நீராடிச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். கடந்தமுறைபோல் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காகப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 19,500. இந்த மகாமகத்திற்காக சாலைகள், பேருந்து நிலையங்கள், கழிப்பிட வசதிகள் தயார் செய்வதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.40 கோடி. 2016 மகாமகம்: 2016இல் அடுத்த மகாமகம் நிகழவுள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் துவங்கும் மகாமக திருவிழாவின் நிறைவு நாளான 22ம் தேதி மகாமகக் குளத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர். ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாக கருதப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமகம் நடைபெற்றது. மகாமக விழாவினையொட்டி மகாமகம் தொடர்பான கோயில்களில் 24 ஜனவரி 2016 அன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சிவன் கோயில்களில் 13 பிப்ரவரி 2016 அன்றும் வைணவக் கோயில்களில் 14 பிப்ரவரி 2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் 21 பிப்ரவரி 2016 அன்றும் கும்பேஸ்வரர் கோயிலில் 22 பிப்ரவரி 2016 அன்றும் தேரோட்டம் நடைபெறவுள்ளது. மகாமக பெருவிழாவுக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கோபுரம், மகாமகக் குளம், சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது. இன்று நாம் காணுகின்ற மகாமகக்குளத்தின் அழகுக்கும், கலை நேர்த்திக்கும், சுந்தர அழகில் சொக்க வைக்கும் சுற்று மண்டபங்களின் எழில் தோற்றத்துக்கும் கோவிந்த தீட்சிதர் முக்கியக் காரணமாய் இருந்தார் என்று வரலாறு சொல்கிறது. மகாமகக் குளத்தைச் சுற்றி இருந்த மணல் சேற்றுப் பகுதிகளை நீக்கி, தூய்மைப்படுத்தி, குளத்தின் உள்ளே ஏறி இறங்க வசதியாக படித்துறைகளை அமைத்தவர். அதன் மேல் தளத்தில் மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு மண்டபங்களையும் கட்டினார். அதன் நினைவாக ஒவ்வொன்றின் அருகிலும் பதினாறு சிவன் கோயில்களைச் சிறியதாக அழகுற வடிவமைத்தார். ஆகவே இந்த மகாமகம் நடைபெறும் கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று மகாமக குளத்தில் நீராடி பிறந்த பிறவியின் பயனை அடைவோம் - சிவசுரேஷ் (ஆன்மீகம் அறிதல் வாட்சப் குழு)